Monday 29 November 2021

“அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”

 “அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”

கோயிலில் தூங்கி வழியும் மக்கள்:

மண்ணுலகிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குட்டிச் சாத்தான்கள், அங்கே தாங்கள் செய்த ‘பணிகளைத்’ தலைமைச் சாத்தானிடம் சமர்ப்பித்தன.

“சிலர் பாலைநிலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். திடீரென அவர்கள் நடுவில் ஒரு சிங்கத்தை அனுப்பி வைத்து, அவர்கள் அனைவரையும் நான் கொன்றுபோட்டேன்” என்று தான் செய்த பணியை மிகவும் பெருமையோடு சொல்லி முடித்தது ஒரு குட்டிச் சாத்தான். அதற்குத் தலைமைச் சாத்தான் அதனிடம், “நீ, பாலைநிலத்தின் வழியாகச் சென்றவர்களுடைய உயிரை வேண்டுமானால் பறித்திருக்கலாம்; அவர்களுடைய ஆன்மாக்களை நீ ஒன்றும் செய்யவில்லை. அதனால் உன்னுடைய பணி மெச்சும்படி இல்லை” என்றது.

இதைத் தொடர்ந்து மற்றொரு குட்டிச் சாத்தான், “சில நாள்களுக்கு முன்பு கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் நான் புயலை அனுப்பி வைத்து, அவர்களைக் கொன்றுபோட்டேன்” என்றது. இதற்கும் தலைமைச் சாத்தான், “நீ அவர்களுடைய உயிரைப் பறித்திருக்கின்றாயே அன்றி, அவர்களுடைய ஆன்மாக்களைப் பறிக்கவில்லை. அதனால் உன்னுடைய பணியும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை” என்றது.

இதற்குப் பிறகு வேறு சில குட்டிச் சாத்தான்களும் மண்ணுலகில் தாங்கள் செய்த பணியைச் சமர்ப்பித்தன. அவற்றிடம் தலைமைச் சாத்தான் முன்பு சொன்ன அதே பதிலைத்தான் சொன்னது. கடைசியாக ஒரு குட்டிச் சாத்தான், தலைமைச் சாத்தானிடம், “நான் கோயிலுக்கு வருகின்றவர்களை திருவழிபாட்டில் ஒன்றிக்க விடாமல் தூங்க வைத்தேன்” என்றது. இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த தலைமைச் சாத்தான், “நீதான் நல்லமுறையில் பணிசெய்திருக்கின்றாய்” என்று அதனைப் பாராட்டியது.

பலர் இன்று கடமைக்காகக் கோயிலுக்குச் சென்று, திருவழிபாடு நடைபெறுகின்றபொழுது, தூங்கி வழிவதைக் காண முடிகின்றது. இவர்களெல்லாம் சாத்தானிடம் தங்களுடைய ஆன்மாக்களை இழந்தவர்கள் என்பதுதான் உண்மை. இத்தகைய சூழ்நிலையில், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “அக மகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தாவீது மன்னர் ஆண்டவரது இல்லத்தின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். (திபா 27:4, 65:4; 2 சாமு 7:1-3). அதை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. அவரது காலத்தில் அல்லது அவரால் எருசலேம் திருக்கோயில் கட்டி எழுப்பப்படாவிட்டாலும், அவராலேயே எருசலேம் திருக்கோயில் கட்டி எழுப்பப்பட்ட இடம் வாங்கப்பட்டது (1 குறி 21-22). தவிர, அவரது காலத்தில் சந்திப்புக் கூடாரமும், அதில் உடன்படிக்கைப் பேழையுமே இருந்தது. அதுவே ஆண்டவரின் இல்லமாகப் பார்க்கப்பட்டது. இத்தகைய ஆண்டவரின் இல்லத்திற்குத் தாவீது அகமகிழ்வுடன் சென்றார். அதனாலேயே அவர், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 122 இல் “ஆண்டவரது இல்லத்திற்குப் போவம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது நான் அக மகிழ்ந்தேன்” என்கிறார்.

இஸ்ரயேல் மக்கள் பாஸ்கா விழா, பெந்தக்கோஸ்தே விழா, கூடார விழா ஆகிய மூன்று சமயங்களில் எருசலேமிற்குச் செல்ல வேண்டும் (விப 23: 14-19). தாவீது எருசலேமில் இருந்தாலும், அகமகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றது, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு அகமகிழ்வோடு செல்ல வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது.

சிந்தனைக்கு:

 இறை மனித சங்கமம் நிகழும் ஆண்டவரின் இல்லத்திற்கு நாம் விருப்பத்தோடுதான் செல்கின்றோமா?

 கட்டாயத்தின் பேரில் ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்லும்போது, கடவுள் அருள்பாலிக்க மாட்டார்!

 உயிருள்ள கோயிலாக நாம் வாழ்வது எப்போது?

இறைவாக்கு:

‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு’ (எசா 56:7) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவரின் இல்லம் எல்லா மக்களுக்குரிய இறைமன்றாட்டின் வீடு என்பதை உணர்ந்தவர்களாய், ஆண்டவரின் இல்லத்திற்கு ஆர்வமுடன் சென்று, அவரை வழிபட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


No comments:

Post a Comment