_கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை


_கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை._

*திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29-3: 6*

அன்பிற்குரியவர்களே, இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை.

என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம். பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

*பதிலுரைப் பாடல்*

*திபா 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)*

_பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்._

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

*யோவா 1: 14,12b*

_அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா._

*நற்செய்தி வாசகம்*

_இதோ! கடவுளின் செம்மறி._  

*+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34*

அக்காலத்தில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்'' என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

*சிந்தனை*

திருமுழுக்கு யோவானின் அற்புத சான்று பாராட்டுக்குரியது.

தான் எதற்கு அனுப்பப்பட்டாரோ அதனை அற்புதமாக செயல்படுத்துகின்றார்.

இவரே இறைமகன், இவரைக் குறித்து சான்று பகரவே நான் அனுப்பப்பட்டேன் என்றார்.

நாம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது அவரைப் புகழவும், அவர் நாமத்தில் செயல்படவுமே, இன்றைக்கு அதனை செய்கின்ற மக்களாக நாம் செயல்பட்டு வருகின்றோமா? அல்லது தேர்வு செய்யப்பட்ட மக்களுக்குரிய செயலை செய்ய தவறியவர்களாக இருந்து வருகின்றோமா?

அழைப்புக்குயேற்ற வாழ்க்கை வாழ்வோம்.

பாவம் செய்யும் யாவரும் அவரை அறிந்திருப்பதில்லை. அவரோடு இணைந்திருப்பவர்கள் எவரும் பாவமும் செய்வதில்லை. காரணம் அவரிடம் பாவம் இல்லை. பாவத்திற்கு அப்பாற்பட்டவர் அவர். அவராடு இணைந்த நிலையில் வாழ்ந்து, பாவத்தை நாமும் களைவோம்.


No comments:

Post a Comment