Wednesday 31 July 2019

அந்தியோக்கு நகர தூய மார்கரேட் வாழ்க்கை வரலாறு

_“யூதர்கள் அரும் அடையாளங்களை வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது (1 கொரி 1: 22,23)._

*வாழ்க்கை வரலாறு*

இன்று நாம் நினைவுகூரும் மார்கரேட், அந்தியோக்கு நகரில் இருந்த ஒரு பிறமத குருவினுடைய மகளாகப் பிறந்தார். இவர் வளர்ந்து பெரியவராகியபோது கிறிஸ்தவப் போதனைகளால் தொடப்பட்டு, கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இதை அறிந்த மார்கரேட்டின் தந்தை அவரை வீட்டைவிட்டே துரத்திவிட்டார். இதனால் மார்கரேட் வீட்டைவிட்டு வெளியே சென்று, ஆடுமேயத்து பிழைத்து வந்தார்.

மார்கரேட் பேரழியாக இருந்தார். எனவே அவருடைய அழகில் மயங்கிய பலரும் அவரை மணந்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால் மார்கரேட்டோ யாரையும் மணந்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் ஒலிப்ரயுஸ் என்பவன் மார்கரேட்டை எப்படியாவது மணந்துகொள்ளத் தீர்மானித்தான். அதனால் அவன் மார்கரேட்டிடம் சென்று, அவரை வற்புறுத்திக் கேட்டான். ஆனால் மார்கரேட்டோ தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சினம்கொண்டவன் அவரை, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகின்றார் என்று ஆளுநனின் போட்டுக்கொடுக்க, அவன் அவரைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யத் தொடங்கினான்.

மார்கரேட் இவ்வாறு சிறையில் அடைபட்டு, சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில், சாத்தான் இராட்சதப் பாம்பு வடிவில் வந்து, அவரை விழுங்கப் பார்த்தது. ஆனால் அவர் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையோ பாம்பை இரண்டாகக் கிழித்துப் போட்டது. இதைப் பார்த்த வியந்துபோன சிறைக்கைதிகள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இச்செய்தி ஆளுநனின் செவிகளை எட்ட, அவன் மார்கரேட்டை எரிகின்ற எண்ணெய் கொப்பறையில் தூக்கிப் போட்டான், அது ஒன்றும் செய்யவில்லை. இதனால் அவன் மார்கரேட்டின் தலையை வெட்டிக் கொன்று போட்டான். இவ்வாறு மார்கரேட் தான் கிறிஸ்துவின் மீது விசுவாசத்திற்காக கொல்லப்பட்டார்.

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*  

தூய மார்கரேட்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 
  
*1. சிலுவை மீட்பின் சின்னம்* 

தூய அந்தியோக்கு நகர மார்கரேட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட உண்மை மிகத் தெளிவாக விளங்குகின்றது. மார்கரேட் சிறையில் அடைபட்டிருந்த தருணத்தில் பாம்பு வடிவில் இருந்த சாத்தானோ அவரை விழுங்க நினைத்தபோது, மார்கரேட் தன்னுடைய கையில் பிடித்திருந்த சிலுவையால் அதனை இரண்டு துண்டாக்கினார். இங்கே சிலுவை மார்கரேட்டுக்கு சாத்தானுடைய பிடியிலிருந்து விடுவித்து, வாழ்வினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

தூய மார்கரேட்டின் வாழ்க்கையில் நடந்தது போல, நம்முடைய வாழ்விலும் அதிசயங்கள் நடைபெறும். எப்போது என்றால், நாம் சிலுவையின் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்கின்றபோது. பல நேரங்களில் நாம், நம்முடைய நெற்றியில் அடிக்கடி சிலுவை அடையாளம் வரைவதாலோ என்னவோ அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலே இருக்கின்றோம். என்றைக்கு நாம் சிலுவையை நம்முடைய வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாகப் பார்க்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதன்வழியாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஆசிர்வாதங்கள் ஏராளம்.

இடைக்காலத்தில் கீழை நாடுகளின்மீது முகமதியர்களின்  படையெடுப்பு அதிகமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் யாராரெல்லாம் அவர்கள் கையில் அகப்பட்டார்களோ (கிறிஸ்தவர்கள் உட்பட) அவர்கள் அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றினார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க கிறிஸ்தவர்கள் தீவிரமாக யோசித்தார்கள். அப்போது யாரோ ஒருவர் ‘முகமதியர்களுக்கு சிலுவை அடையாளமே பிடிக்காது. ஆகையால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களுடைய நெற்றியிலே இரும்பை நன்றாகச் சூடாக்கி, சிலுவை அடையாளம் வரைந்துகொண்டால், அதனைப் பார்க்கின்ற  எதிரிகள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்’ என்று சொல்ல, அந்த யோசனை பலருக்கும் பிடித்துப் போனது.

எனவே அவர்கள் அனைவரும் இரும்பைச் சூடாக்கி, தங்களுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டார்கள். ஒருசிலர் மட்டும் இரும்பைச் சூடாக்கி, நெற்றியில் சிலுவை அடையாளம் வரைவதா? அதெல்லாம் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் முகமதியரின் படையெடுப்பு நிகழ்ந்த போது யாராருடைய நெற்றில் சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தனவோ அவர்கள் யாவரும் விடப்பட்டு, அடையாளம் பொறிக்கப்படாதவர்கள் யாவரும் இழுத்துக்கொண்டு போகப்பட்டு, முகமதியர்கள் ஆக்கப்பட்டார்கள். இது ஒரு வரலாற்றுச் செய்தி

இங்கே சிலுவை மக்களுக்கு பாதுக்காப்பினைத் தந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. நமது வாழ்விலும் சிலுவையின் வழியாக சிம்மாசனத்தை அடையலாம்.

ஆகவே, தூய மார்கரேட்டைப் போன்று, நமது வாழ்வில் சிலுவையின் மகத்துவத்தை உணர்ந்து வாழ்வோம், எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


No comments:

Post a Comment