Wednesday 31 July 2019

கடவுட்கு அஞ்சுகிறவர் வேறு யார்க்கும் அஞ்ச வேண்டியதில்லை

*மத்தேயு 10: 24-34*

*நிகழ்வு*

ஒரு தாய் இருந்தார். அவர்க்கு பத்து வயதில் ஒரு மகனும் ஏழு வயதில் ஒரு மகனும் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். இருவரும் பயங்கர சேட்டைக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் நல்வழிப்படுத்த அந்தத் தாய் நினைத்தார். எனவே அவர் தன் இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு பங்குத்தந்தையிடம் சென்றார். "சாமி இவர்கள் இருவரும் என்னுடைய மகன்கள்... இவர்க்கு இருவருமே பயங்கர சேட்டைக்காரர்களாக இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் இருவருடைய உள்ளத்திலும் நீங்கள் இறையச்சத்தை - தெய்வ பயத்தை - ஊட்டிவிட்டால் இருவரும் நல்ல பிள்ளைகளாகிவிடுவார்கள்" என்றார்.

அந்தத் தாய் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, பங்குத்தந்தை அவர்கள் இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசத்தொடங்கினார். முதலில் அவர் அந்தத் தாயின் இளைய மகனைக் கூப்பிட்டு அவனிடம், "கடவுள் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அவன் திருதிருவென முழித்தான். உடனே பங்குத்தந்தை, தான் கேட்ட கேள்வி புரியாமல்தான் இவன் இப்படித் திருதிருவென முழிக்கிறான் என நினைத்துக்கொண்டு அவனிடம் இன்னும் சத்தமாக அதே கேள்வியைக் கேட்டார். அவனுக்கு பயமாய்ப் போய்விட்டது.

அடுத்த நொடி அவன் பங்குத்தந்தையிடமிருந்து தன் அண்ணனிடம் ஓடிவந்தான். "அண்ணே! கடவுளை நாம்தான் திருடி வைத்திருக்கிறோம் என்பதுபோல் பங்குத்தந்தை 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று கேட்கிறார்" என்று சொல்லி அழத் தொடங்கினான். அவன் அழுவதைப் பார்த்துவிட்டு மூத்தவனும் அழத் தொடங்கினான். இருவரையும் அவனுடைய தாய் வந்து தேற்றிய பிறகுதான் அமைதியானார்கள். இதற்குப் பின்பு அவர்கள் கடவுள் என்ற வார்த்தையைக் கேட்டதும் அச்சம் கொள்ளத் தொடங்கினார்கள். அது மட்டுமல்லாமல் சேட்டைகள் செய்வதையும் குறைத்துக் கொண்டார்கள்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இறையச்சம் - தெய்வபயம் - நம்முடைய வாழ்விற்கு எந்தளவிற்கு இன்றியமையாதது என்பதை மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையச்சத்தின் தேவையை மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

*அர்த்தமின்றி விமர்சிப்போர்க்கு அஞ்சவேண்டாம்*

இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றார். அவ்வாறு அனுப்புகின்ற போது அவர்கட்குச் சொல்லும் அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்திருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் யார் யார்க்கு அஞ்சவேண்டாம் என்பதையும் யார்க்கு அஞ்சவேண்டும் என்பதையும் குறித்துப் பேசுகின்றார். முதலில் நாம் யார்க்கு அஞ்ச வேண்டாம் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்துவிட்டு, யார்க்கு அஞ்ச வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இயேசு தன் சீடர்களிடம், அர்த்தமின்றி விமர்சிப்போரைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கூறுகின்றார். ஏனென்றால், ஒருவருடைய வளர்ச்சியைக் கண்டு விமர்சிப்பவர்கள் எப்படியும் விமர்சிப்பார்கள்... தன்னையும் அவர்கள் அப்படித்தான் விமர்சித்திருக்கிறார்கள்... அதனால் அவர்களைக் குறித்து அஞ்சவேண்டாம் என்று இயேசு சீடர்களிடம் கூறுகின்றார்.

*உயிரைக் கொல்பவர்க்கு அஞ்சவேண்டாம்*

இயேசு தன் சீடர்களிடம் அஞ்சவேண்டாம் என்று சொல்கின்ற இரண்டாவது வகையினர், உயிரைக் கொல்பவர்கள் ஆவார். இவர்களைக் குறித்து நாம் ஏன் அஞ்சவேண்டாம் என்றால், இவர்களால் நம்மிடமிருந்து உயிரை மட்டுமே பறிக்க முடியும். வேறெதுவும் செய்யமுடியாது. உயிரை விட ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றது. அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. எத்தனையோ புனிதர்கள் குறிப்பாக மரிய கொரற்றி போன்றோர் உடலைவிட ஆன்மா பெரிது என நினைத்து சாவை ஏற்றார்கள். ஆகையால் நாம் உடலைக் கொல்பவர்க்கு அஞ்ச வேண்டிய தேவையில்லை.

*ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போம்*

அர்த்தமின்றி விமர்சிப்போர்க்கும் உயிரைக் கொல்வோர்க்கும் அஞ்சவேண்டாம் என்று சொன்ன இயேசு, இறுதியில் ஆண்டவர்க்கு அஞ்சவேண்டும் என்று சொல்கிறார். காரணம் ஆண்டவர்க்கு மட்டுமே எல்லா அதிகாரமும் இருக்கிறது. அவரால் மட்டுமே உடலோடு சேர்த்து ஆன்மாவையும் நரகத்தில் தள்ள முடியும். அதனாலேயே இயேசு அவ்வாறு சொல்கிறார். யோபு புத்தகத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும் உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார்." (யோபு 33:18) உண்மைதான் கடவுளால் மட்டுமே நம் ஆன்மாவைக் குழியில் தள்ளவும் அதிலிருந்து காக்கவும் முடியும். ஆகையால் அப்படிப்பட்டவர்க்கு அஞ்சி வாழ்வது மிகவும் இன்றியமையாதது.

*சிந்தனை*

‘கடவுட்கு அஞ்சுகிறவர் வேறு யார்க்கும் அஞ்ச வேண்டியதில்லை' என்பார் மார்டின் லூதர். எனவே நம்முடைய வாழ்வின் ஆதார சுருதியாக இருக்கும் ஆண்டவர்க்கு அஞ்சி, அவர் வழி நடப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


No comments:

Post a Comment